Wednesday 3 August 2011

சனி எல்லாம் செய்வார்



'சனியைப் போல கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை' என்பது வழக்கு மொழி. சனி என்றாலே நம்மையறியாமல் நமக்கு பயம் ஏற்படுகிறது. எதிராளிகளை கோபத்துடன் திட்டும்போது 'சூரியன், சந்திரன்' என்றெல்லாம் கூறாது 'சனியனே' என்று வைகிறோம். ஆக, நம்மை அறியாமலே நாம் சனியின் பெயரை அடிக்கடி உச்சரிக்கிறோம்!
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆகும் சனி அடுத்தடுத்த ராசிகளுக்குப் பெயர்ந்து நன்மை தீமைகளை உண்டாக்குகிறார்.
ஒருவர் பிறந்த ராசிக்கு நான்காமிடத்தில் சனி சஞ்சரித்தால் அது 'அர்த்தாஷ்டம சனி'. பிறந்த ராசிக்கு ஏழில் சஞ்சரிக்கும் காலம் 'கண்டச் சனி' எனப்படும். எட்டாம் ராசியில் இருந்தால் 'அஷ்டமத்துச் சனி'. பிறந்த ராசியிலிருந்து 12, 1, 2 ஆகிய இடங்களில் சஞ்சரித்தால் 'ஏழரை நாட்டுச் சனி'. முதல் சுற்றில் 'மங்கு சனி' எனப்படும். அப்பொழுது மிகவும் கஷ்டப்படும் நிலை வரும். அடுத்த சுற்று 'பொங்கு சனி'. பொன்னும், பொருளும் ஏராளமாகச் சேரும். மூன்றாம் சுற்று 'மரணச் சனி' எனப்படும்.
சனியின் பிடியில் அனைவரும் அகப்பட்டே ஆக வேண்டும்! இதற்கு சிவபிரானும் விதிவிலக்கல்ல! சனியின் தாக்கத்தாலேயே சிவபெருமான் பிச்சை எடுத்தார்; ராமபிரான் சீதையைப் பறிகொடுத்து வாடினார்; சந்திரமதியை அரிச்சந்திரனே வாளால் வெட்டும் நிலை ஏற்பட்டது. பாண்டவர்கள் வனவாசம் சென்றது சனியினாலேயே. ராவணன் நவ கிரகங்களை படிகளாக்கி மிதித்த்ஹபோது சனியின் பார்வை பட்டதாலேயே கேடு காலம் ஆரம்பித்து, மரணமடைந்தான். நளனோ மனைவியை இழந்து, சுய உருவமும் இழந்து பைத்தியம் போல திரிய, "நீ திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபடு" என்று நாரதர் சொன்னதற்கிணங்க, அவன் திருநள்ளாறு சென்று வழிபட, சனியும் அவனை விட்டு விலகி, "நளராஜனே! உன் சரிதம் படித்து, நள்ளாறு வந்து வழிபடும் பக்தர்களுக்கு சனிப் பெயர்ச்சியால் எத்துன்பமும் ஏற்படாது" என்றருளினார்.
  • புதுச்சேரி மாநிலத்தில் காரைக்காலிலிருந்து ஐந்து கி. மீ. தொலைவிலுள்ள திருநள்ளாறு திருத்தலத்தில் சனி கிரகத்தின் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதாக கூறப்படுகின்றது. இதனாலேயே சனிப் பெயர்ச்சியின் சமயம் இவ்வாலயம் சென்று ஒரு நாளாவது தங்க வேண்டும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன. சனிப் பெயர்ச்சி சமயம் செல்ல முடியாதோர், அதற்கு பதினைந்து நாள் முன்போ, பின்போ சென்று தரிசித்தால் கடுமையான சோதனையும் கடுகாக மாறிவிடும் என்பது ஜோதிடர்கள் கூற்று. இங்குள்ள சனி பகவான் கிழக்கு திசை நோக்கி, அனுக்கிரக மூர்த்தியாக அபய வரத முத்திரையுடன், அருளாட்சி செய்கிறார்.
  • மதுரை மாவட்டம், தேனியிலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் உள்ள குச்சனூரில் சனீசுவரர் கல்தூண் போன்ற உருவத்தில் பூமி வெடித்து சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.நாமக்கல் அருகிலுள்ள தத்தகிரி முருகன் ஆலயத்தில் அமர்ந்த நிலையில் எட்டடி உயரமான சனீஸ்வரர் மேற்கு நோக்கி ஆலயம் கொண்டுள்ளார். எதிரில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. ஆஞ்சநேயரை வழிபட சனியின் துன்பங்கள் குறையும்.
  • சென்னை மேற்கு மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் 'வட திருநள்ளாறு' என்ற பெயரில் மனைவியுடன் அற்புதக் காட்சி தரும் சனீஸ்வரருடன், பஞ்சமுக ஆஞ்சநேயரும், விநாயகப் பெருமானும் இணைந்து அருளாட்சி செய்கின்றனர்.
  • சென்னை ஆதம்பாக்கம் ஈ.பி. காலனியில் தரிசனம் தரும் விஸ்வரூப சர்வ மங்கள் சனீஸ்வர பகவான் நெடிதுயர்ந்து கம்பீரமாகக் காட்சி தந்து, தன்னை நாடி வரும் பக்தர்களின் துன்பங்களை துடைத்தெறிகிறார்.
  • மும்பையில் சனீஸ்வரனுக்கு சிறிய தனிக் கோயில்கள் நிறைய உண்டு. நாசிக் அருகிலுள்ள சனி சிங்கணாப்பூரில் சனி பகவான் நான்கடிக்கு மேற்பட்ட உயரத்தில் பாறை வடிவில் சுயம்புவாகக் காட்சி தருகிறார். இந்த சனி பகவானை ஆண்கள் மட்டுமே சுத்தமாகக் குளித்து ஆலயத்திலேயே கிடைக்கும் ஆடை அணிந்து பூசிக்கலாம். பெண்கள் விலகி நின்றே தரிசிக்கலாம். மேற்கூரையும் கிடையாது. சனி பகவான் அனுக்கிரகத்தினால் இவ்வூரிலுள்ள வீடுகள், கடைகள், குளியலறைகளுக்குக் கூட கதவு கிடையாது. இங்கு திருட்டே நடக்காதாம். அவ்வூரில் திருடிக் கொண்டு எவரும் அவ்வூரை விட்டு வெளியேற முடியாதது இன்று வரை நடக்கும் அதிசயமாம்!
  • சனிக்கு உகந்த தானியம் எள்ளானதால் எள் சாதம், நல்லெண்ணெய் தீபம் ஏற்றது. சனிக்கு உகந்தவர் ஆஞ்சநேயர், விநாயகர், திருப்பதி பெருமாள்.
  • ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தி, உளுந்து வடை மாலை சாற்றி, உள்ளன்போடு துதிக்க சனியின் துன்பங்கள் குறையும். புரட்டாசி சனி விரதம் இருப்போர் எள்ளு சாத நிவேதனம் செய்து, விநியோகம் செய்ய வேண்டும். "உன் பக்தர்களை அண்டமாட்டேன்" என்று சனி பகவான் பெருமாளிடம் வாக்குக் கொடுத்துள்ளதாக புராண வரலாறு!
  • சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிக்க மகிமை வாய்ந்தது. சிவபெருமான் பாற்கடலில் பொங்கிய விஷத்தைப் பருகிய நாள் சனியாதலால், அன்று விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று வழிபட்டு, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி, எள் நைவேத்யம் செய்து வழி பட்டால் சனியின் அருள் பெறலாம்.
  • சனி பகவானின் வாகனம் காக்கை. அது இறந்து போன முன்னோரின் பிரதி நிதியாகக் கருதப்படுவதால், தினமும் காக்கைக்கு அன்னமிடுவதால் சனியின் பாதிப்பு குறையும். இந்து மதம் தவிர புத்த, ஜைன மதங்களிலும் சனி வழிபாடு உள்ளது. புத்த மதத்தில் சனி தண்டம் ஏந்தியவராய், ஆமை வாகனம் கொண்டவராகவும், ஒன்பது கிரகங்களில் ஏழாம் இடத்தை உடையவராயும் வணங்கப்படுகிறார்.
     
  • சனி காயத்ரி:
  • காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|    தந்நோ மந்த: ப்ரசொதயாத்||
எளிய 'சனிப்போற்றி" துதி:
முனிவர்கள் தேவர் ஏனை
மூர்த்திகள் முதலானோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வுன்
மகிமையல்லால் வேறுண்டோ?
கனிவுள தெய்வம் நீயே!
கதிர் சேயே! காகம் ஏறும்
சனியனே உனைத் துதித்தேன்
தமியனேற்கருள் செய்வாயே!
நீரினை உண்டெழு மேக வண்ணா போற்றி!
நெடுந்தவத்தில் உறு கமலக் கண்ணா போற்றி!
சூரியன் தன் தவத்தில் வருபாலா போற்றி!
தூய நவக்கிரக்த்துள் மேலா போற்றி!
காரியெனும் பேர் கொள் உபகாரா போற்றி!
காசினியில் கீர்த்தி பெற்ற தீரா போற்றி!
மூரி கொளும் நோய் முகவா முடவா போற்றி!
முதுமணிகள் முண்டகத்தாள் போற்றி! போற்றி!

நன்றி ஞான ஆலயம் ஜூன் 2005 இதழில் வெளியானது



No comments:

Post a Comment